சாத்தான்குளம், ஏப்.1: வைகுண்டம் தொகுதியில் விவசாயத்துக்கான நீர் ஆதார திட்டங்கள் மேம்படுத்தப்படும். அனைத்து ஒன்றிய அலுவலகத்தில் படித்த இளைஞர்கள், பெண்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வேன் என காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிரதராஜ் தெரிவித்தார். வைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம் பேய்க்குளம் பகுதிக்கு சென்று ஆதரவு திரட்டினார். திறந்த காரில் நின்று தேர்க்கன்குளத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர், வசவப்பனேரி, பழனியப்பபுரம், மீரான்குளம், பெருமாள்குளம், குருகால்பேரி, சாலைபுதூர், சவேரியார்புரம், விராக்குளம், பேய்க்குளம், பனைக்குளம், கருங்கடல், இளமால்குளம், புளியங்குளம், கட்டாரிமங்கலம், கருவேலம்பாடு, அம்பலச்சேரி, சின்னமாடன் குடியிருப்பு, குறிப்பன்குளம், பாலசுப்பிரமணியபுரம், வைத்தியலிங்கபுரம், குறிப்பன்குளம் காலனி ஆகிய பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் பேய்க்குளம் பஜாருக்கு வந்தபோது ஆட்டோ டிரைவர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் பேசுகையில், உங்களில் ஒருவனாக நின்று அனைத்து உதவிகளையும் செய்வேன். அரசு உதவி தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கிடைக்க செய்வேன். இப்பகுதியில் விவசாயத்துக்கு நீர்ஆதாரம் இல்லாமல் உள்ளது. எனவே, நீர் ஆதாரத்தை பெருக்கும் திட்டங்களை நிறைவேற்றி தருவேன். தொகுதியில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலை இல்லாத இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க செய்வேன்’ என்றார்.
அவருடன் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, யூனியன் கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், மாநில வக்கீல் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் வில்லியம் பெலிக்ஸ், தெற்கு மாவட்ட பொருளாளர் எடிசன், பேய்க்குளம் நகர காங்கிரஸ் தலைவர் தாமஸ், துணை தலைவர் ஆறுமுகம், கட்டாரிமங்கலம் ஊராட்சித் தலைவர் கீதாகணேசன், ஒன்றிய திமுக துணை செயலாளர் சக்திக்கனி, கிளை செயலாளர்கள் சாமுவேல்ராஜ், பிரபாகர், சமத்துவ மக்கள் கழக வைகுண்டம் ஒனறிய செயலாளர் சதீஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.