×

மோடி மஸ்தான் வேலை மக்களுக்கு நன்றாக தெரியும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தாக்கு

புதுச்சேரி, ஏப். 1: புதுவை வந்த பிரதமர் அரைத்த மாவையே அரைத்து விட்டு சென்றுள்ளார். பாஜக மோடி மஸ்தான் வேலை மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்தார். அவர் புதுச்சேரி மக்களின் பிரச்னைகள் ஒன்றுமே அவருடைய பேச்சில் இல்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும். மாநிலத்தின் அனைத்து கடன்களை ரத்து செய்ய வேண்டும். அதிகப்படியான நிதி கொடுக்க வேண்டும். இதனை பற்றி பிரதமர் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இது சம்பந்தமாக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசும்போது கூட அதற்கு பிரதமர் பதிலளிக்கவில்லை.

ஆனால் அவர் என்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியும், நான் ஊழல் செய்துவிட்டதாகவும் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார். எங்களுடைய ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார். நான் காந்தியின் குடும்பத்துக்கு சேவகம் செய்பவர் என்றும், எங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கவில்லை எனவும் பேசியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது. நான் ஊழல் செய்திருந்தால் ஏன் விசாரணை வைக்கவில்லை? பிரதமர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை என் மீது கூறுகிறார்.

மழை வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வந்தபோது அவருடைய காலணியை கையால் எடுத்து கொடுத்தேனே தவிர, அவரது காலில் காலணியை போட்டுவிடவில்லை. அதேபோல நான் தவறாக மொழி பெயர்த்தேன் என்பது அப்பட்டமான பொய். அதற்கான விளக்கம் நான் அளித்துள்ளேன். இதனை பிரதமர் திரித்து பேசுகிறார். ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ரங்கசாமிக்கும், என்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை பிரதமர் தந்துள்ளார்.

பல திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தாமல் உள்ள மோடி புதுச்சேரிக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று கூறுகிறார். பிரதமர் சாகர் மாலா திட்டத்தை கொண்டு வந்து மீனவர்களின் வயிற்றில் அடிக்கிறார். பிரதமரின் உரையானது புதுச்சேரி மக்களால் ஏற்றுக்கொள்ள கூடாத ஒரு உரையாக உள்ளது. பாஜக தன்னுடைய அதிகார பலம், பணபலத்தை வைத்து அனைவரையும் மிரட்டி மக்கள் மத்தியில் வாக்குகளை வாங்க நினைக்கிறது. பாஜக கூட்டணியில் என்ஆர் காங்., உள்ளது. என்.ஆர் காங்கிரசிற்கு போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு போடும் ஓட்டு. இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவின் பி டீமாகத் தான் என்ஆர் காங்கிரஸ் இருந்து வருகிறது. புதுவையை காப்பாற்ற வேண்டுமென்றால், காங்கிரஸ் - திமுக கூட்டணியால் மட்டும் தான் முடியும்.

கடந்த 5 ஆண்டுகளில் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று ரங்கசாமி கூறுகிறார். அவர் கண்களை மூடிக்கொண்டு பேசுகிறார். நாங்கள் எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்பதை பட்டியலிட்டு கொடுத்துள்ளேன். பிரதமர் எதற்காக புதுச்சேரிக்கு வந்தார். என்ன சாதித்தார் என்பது மக்கள் மத்தியில் இருக்கின்ற மிகப்பெரிய கேள்வி. இங்கு வந்த எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் அரைத்த மாவையே அரைத்துவிட்டு சென்றுள்ளார்.  புதுவையில் ஆட்சியை பிடிக்க பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக வருமான வரித்துறையை ஏவி விடுகின்றனர். மக்கள் மத்தியில் தவறான செயல்களை செய்து கவர வேண்டும் என்று நினைக்கின்றனர். பாஜகவின் மோடி மஸ்தான் வேலைகள் மக்களுக்கு நன்றாக தெரியும், என்றார்.

Tags : Former ,Chief Minister ,Narayanasamy ,Modi Masdan ,
× RELATED புதுவை முதல்வர் ரங்கசாமி,...