பொள்ளாச்சி, மார்ச் 31: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று, நகராட்சிக்குட்பட்ட 11, 31, 20 மற்றும் 21வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, ‘‘பொள்ளாச்சி தொகுதி மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்துள்ளேன். இதில் குறிப்பாக, பொள்ளாச்சி-கோவை ரோடு 4 வழிச்சாலை, பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் புதிய ரயிவே மேம்பாலம் சாலை, கிழக்கு புறவழிச்சாலை உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ரூ.170 கோடியில், பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பணிகள் முடிந்த பகுதியில் ரூ.100 கோடியில் தார்சாலை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்த பின், பொள்ளாச்சி நகரம் கொசு தொல்லை, கழிவுநீர் தேங்காத முதன்மை நகரமாக மாறிவிடும். அரசு தலைமை மருத்துவமனையில் 9 தளங்களுடன் 500 படுக்கை வசதியுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 6தளங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தில், சிக்கலான பிரசவ அறுவை சிகிச்சை, சிகிசைக்கு பிறகு கவனிப்பு உள்ளிட்ட பிரிவுகள் அமைய உள்ளது. இப்படி பொள்ளாச்சி தொகுதியில் பல வளர்ச்சி பணிகள் மேலும் தொடர, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்’ என்றார். இந்த பிரசாரத்தில், மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாச்சலம், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் சுரபி ரமேஷ், வெள்ளியங்கிரி, முன்னாள் கவுன்சிலர் அருள், கூட்டணி கட்சி பாஜ மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.