×

தென்காசி தொகுதியில் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த பாடுபடுவேன் காங். வேட்பாளர் பழனி நாடார் உறுதி

சுரண்டை, மார்ச் 31: தென்காசி தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தரம் உயர்த்த பாடுபடுவேன் என காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் உறுதியளித்தார். மேலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித்தருவேன் என்றார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பழனி நாடார், தொகுதி முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்குசேகரித்து வருகிறார்.

அவரை வியாபாரிகள் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் என ஏராளமானோர் நேரில் சந்தித்து ஆதரவு அளித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நடந்த பிரசாரத்தில் பழனி நாடார் பேசுகையில் ‘‘பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளாததால் விலைவாசி உயர்ந்து விட்டது. இதனால் அவதிப்படும் அனைத்துத்தரப்பினரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு மகத்தான ஆதரவு அளித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர்ந்ததும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். குறிப்பாக அதிமுக அரசால் கிடப்பில் போடப்பட்ட இரட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்.

குற்றாலத்தை மேம்படுத்தவும், அங்குள்ள வியாபாரிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம்பெற சிறப்பு திட்டங்கள் கொண்டுவருவேன். புதிய நீர் மேலாண் திட்டங்கள் வகுத்து  முன்மாதிரி தொகுதியாக தென்காசியை மாற்றுவேன். தென்காசி தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் தரம் உயர்த்தப்படும். இதன்மூலம் அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்க பாடுபடுவேன்’’ என்றார். இதனிடையே சுரண் டை வரகுணராமபுரத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேட்பாளர் பழனி நாடார் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.

Tags : Kong ,Tenkasi ,Palani Nadar ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...