கழுகுமலை, மார்ச் 31: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை சுவாமிகள் திருமண பட்டாடைகள் உடுத்தி மேளதாளத்துடன் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இரவு 8 மணியளவில் கழுகாசலமூர்த்தி வள்ளி, திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. இதைதொடர்ந்து பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை செல்லக்கண்ணு, மூர்த்தி, வைகுண்டம், தர்மராஜ், மோகன், வீரபாகு பட்டர்கள் நடத்தினர். கோயில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரன் தலைமை வகித்தார். பிரதோஷ குழு முருகன், காவல்துறை ஆய்வாளர் ஷோபா ஜென்சி கலந்து கொண்டனர். நேற்று இரவு 8 மணிக்கு தந்த பல்லாக்கில் பட்டினப் பிரவேசமும், இன்று இரவு 7மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகின்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சீர்பாத தாங்கிகள் செய்திருந்தனர்.