×

திருச்சி-காரைக்கால், மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் இயக்க விரைவில் நடவடிக்கை முதன்மை மேலாளர் தகவல்

தஞ்சை, மார்ச் 31: திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி-காரைக்கால், திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் விரைவில் அடுத்த கட்டமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே முதன்மை இயக்க மேலாளர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த பொது நல வழக்கறிஞர் ஜீவக்குமார், ரயில்வே மத்திய அமைச்சர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பினார். அந்த மனுவில், கொரோனா ஊரடங்கின் போது திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 22 பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டும், இதுவரை பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை.

இதனால் தினமும் பல்வேறு இடங்களுக்கு பணிகளுக்கு செல்லும் அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால், முடக்கப்பட்டுள்ள பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது. இதற்கு தெற்கு ரயில்வே முதன்மை இயக்க மேலாளர் அளித்துள்ள பதிலில், திருச்சி மயிலாடுதுறை, திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில் அடுத்த கட்டமாக விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கடிதம் மூலம் பதில் தெரிவித்துள்ளார்.

Tags : Trichy-Karaikal ,Mayiladuthurai ,Principal Manager ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...