திருச்சுழி, மார்ச் 31: திருச்சுழி அருகே கண்மாய் பகுதியில் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அருப்புக்கோட்டையிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் பரளச்சி கண்மாய் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் நேற்று முன்தினம் முருகன் சிலை கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பரளச்சி போலீசிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரளச்சி போலீசார் சிலையை கைப்பற்றினர். இந்த சிலை எங்கிருந்து கடத்தி வரப்பட்டு கண்மாயில் போடப்பட்டது, எந்த கோயில்களில் முருகன் சிலை காணாமல் போய் உள்ளது என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.