×

பிரசார தகவல்கூட தெரிவிப்பதில்லை கண்டுகொள்ளாத அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் புலம்பல்

சிவகங்கை, மார்ச் 31: சிவகங்கை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் பாஜ, தமாகா, பாமக கட்சிகளை அதிமுகவினர் ஒரு பொருட்டாகவே கருதாததால் அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக சார்பில் சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய மூன்று தெகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காரைக்குடியில் பாஜ வேட்பாளர் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பாஜ வேட்பாளர் போட்டியிட்டாலும் அக்கட்சிக்கு அனைத்து ஊர்களிலும் கிளைகள், சொல்லிக்கொள்ளும்படியான நிர்வாகிகள் என போதிய பலம் இல்லாததால் அதிமுக தலைமையிலேயே தேர்தல் பணி நடந்து வருகிறது. அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்துள்ளார். வேட்பாளர்கள் அனைத்து ஊர்களுக்கும் சென்று வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரத்திற்கு பாஜ மற்றும் மற்ற கட்சி நிர்வாகிகள் அழைக்கப்படுவதில்லை. இது குறித்து அவர்கள் கடும் அதிருப்தியை அதிமுக மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்த நிலையில் அதற்கு பிறகும் மாற்றம் இல்லை.

சம்பந்தப்பட்ட ஊருக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது கூட தகவல் இல்லை என்பதால் அவர்கள் வேட்பாளர்களிடமே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பாஜ.வின் நிலையே இது வென்றால் தமாகா, பாமகவின் நிலை படு மோசமாக உள்ளது. தமாகா தொடங்கப்பட்ட போது சிவகங்கை மாவட்ட காங்கிரசில் இருந்து ஏராளமானோர் சென்ற நிலையில் தற்போது ஒரு சிலர் மட்டுமே அக்கட்சியில் உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பிவிட்டனர்.
முதல்வர் சிவகங்கையில் பிரச்சாரம் செய்ய வந்தபோது அங்கு வந்த தமாகாவை சேர்ந்த முன்னாள் எம்பியைக்கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. இக்கட்சியில் தற்போது நிர்வாகிகள் யார் இருக்கின்றனர் என்பதும் அதிமுகவிற்கு தெரியவில்லை. இதையெல்லாமல் ஆய்வு செய்து அக்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் விரும்பவில்லை. பாமகவில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என்ற பெயரில் சிலர் மட்டுமே மாவட்டத்தில் உள்ளனர். அக்கட்சிக்கு தொகுதியில் நிர்வாகிகள் கூட சரிவர இல்லாத நிலையில் அவர்களை கூப்பிட அவசியம் இருப்பதாகவும் அதிமுக நினைக்கவில்லை. இதனால் இக்கட்சியை சேர்ந்தவர்கள் தாங்களாகவே தங்களை அழைக்கவில்லை, அழைக்கவில்லை என கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இதை அதிமுகவை சேர்ந்தவர்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை.

Tags : AIADMK ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...