×

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை உலகத்தரம் வாய்ந்த ஆலையாக மாற்றுவேன்

திருத்தணி, மார்ச் 30: திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட களாம்பாக்கம், சின்னமண்டலி, பாகசாலை, எல்.வி.புரம், ஒரத்தூர், பெரியகளக்காட்டூர், தொழுதாவூர், காபுல்கண்டிகை, குப்பங்கண்டிகை, மணவூர், ஜாகிர்மங்கலம், மருதவல்லிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலைக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்று சால்வைகள், ஆளுயர ரோஜா மாலைகள் அணிவித்தும், மலர் கிரீடம் வைத்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் நெற்றி திலகம் இட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா பேசியதாவது, “திருவாலங்காட்டில் திறன் மேம்பாட்டு மையம் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வேன். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும், கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க ஏரி குளங்களை தூர்வாரி தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தவும், ஏரி மதகுகளை சீரமைக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும், கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களை நவீனப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அனைத்து கிராமத்திற்கும் தார்சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கவும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவேன்.

திருவாலங்காடு ஒன்றியத்தில் நான் அமைச்சராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தி உள்ளேன். பாலங்கள் மற்றும் தடுப்பணைகளை கட்டி தந்துள்ளேன். மீண்டும் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை உலகத்தரம் வாய்ந்த ஆலையாக மாற்றி காட்டுவேன். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தர உங்கள் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுமாறு தாங்களே மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்,” இவ்வாறு பேசினார். இதில் பாமக மாநில துணை பொது செயலாளர் வ.பாலயோகி, மாநில துணை அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் இ.தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் மணவூர் சே.பூபதி, ஒன்றிய செயலாளர் சண்முகம், பாஜ மாவட்ட தலைவர் ஏ.ராஜ்குமார், ரா.கருணாகரன், டில்லிபாபு, எம்.பி.குமரேசன், புரட்சி பாரதம் கட்சி மாநில இளைஞரணி தலைவர் மணவூர் ஜி.மகா, அதிமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட இணை செயலாளர் விஜயலட்சுமி ராமமூர்த்தி, கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்க தலைவர் பொன்னுரங்கம், தொகுதி செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துக் கொண்டாபுரம் எம்.ரமேஷ், அனல் சேகர், ரமேஷ், ஆனந்தன் இந்திரசேனன், கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் விஜயன் மற்றும் கூட்டணி கட்சிகளை  சேர்ந்த நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : Thiruthani Cooperative Sugar Mill ,
× RELATED திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு...