×

பெண்ணாடம் அருகே பரபரப்பு பாஜக வேட்பாளர் பிரசாரத்தில் பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது

விருத்தாசலம், மார்ச் 30: பாஜக வேட்பாளர் பிரசாரத்தில் பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள கோவிலூரில், திட்டக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் பெரியசாமியை ஆதரித்து அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தினுள் நுழைந்த போது பட்டாசுகளை வெடித்து ஆரவாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாரியம்மன் கோயில் எதிரே உள்ள வீரமுத்து என்பவரின் கூரை வீட்டின் அருகே பட்டாசுகளை வெடித்தபோது, அதில் எழுந்த தீப்பொறிகள் வீரமுத்து வீட்டின் கூரையின் மேல் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கூரையின் மேல் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.  இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் மதியம் கொளுத்தும் வெயில் நேரம் என்பதால், அருகிலுள்ள வீடுகளிலும் தீப்பிடிக்கும் அபாயம் இருந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த பெண்ணாடம் போலீசார் தீப்பிடித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : BJP ,Pennadam ,
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு