மரக்காணம், மார்ச் 30: மரக்காணத்தில் புதுவை மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபரை ஆட்சியர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதுவை மாநில கள்ளச்சாராயம், பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் தங்கு தடையின்றி விற்பனையாகிறன. இதுகுறித்து கடந்த வாரம் தினகரன் நாளிதழில் செய்தியும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மரக்காணம் காவல் நிலையம் அருகில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வழியாக சென்ற வாகனங்களை மடக்கி தேர்தலுக்கு சட்ட விரோதமாக பணம் கடத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த இடத்தில் சந்தேகப்படும்படியாக 2 நபர்கள் இருந்தனர். அவர்களை அழைத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விசாரித்தார். அப்போது ஒருவர் அங்கிருந்து நைசாக தப்பி ஓடிவிட்டார். ஒருவர் வைத்திருந்த பாலித்தீன் பையில் புதுவை மாநில மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை மரக்காணம் போலீசாரிடம் ஆட்சியர் அண்ணாதுரை ஒப்படைத்தார். அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.