கோவை, மார்ச் 30: கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ணத்துக்கடவு, வடபுதூர், கிணத்துக்கடவு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘‘கிணத்துக்கடவில் தக்காளி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைத்துத்தரப்படும். தக்காளியை மதிப்புக்கூட்டு பொருளாக விற்பனை செய்ய ஜாம் தொழிற்சாலை அமைத்துத்தரப்படும். திமுக ஆட்சி அமைந்ததும் கிணத்துக்கடவு தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும். 100 நாட்களில் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றார். கோவை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகராஜ சோழன் தலைமையில், கிணத்துக்கடவு வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு செட்டிபாளையம் பஸ் நிலையம் வார சந்தை மற்றும் வார்டுகளில், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி உட்பட்ட பூங்கா நகர் பகுதியில் திமுக நிர்வாகிகள் ராஜசேகரன், ரங்கசாமி, செந்தில்குமார், கார்த்தி, சுரேந்திரன், அழகிரி (எ) ராஜ்குமார் மற்றும் பலர் வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்வுகளில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, ஒன்றிய செயலாளர் ஈபி.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.