×

தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நரசீபுரத்தில் ஹாகா ஏரியாவில் முறைகேடாக அடுக்குமாடிகள்

கோவை, மார்ச்.30:  கோவையில் மலையக பாதுகாப்பு திட்ட (ஹாகா) விதிமுறை மீறி அடுக்குமாடிகள் கட்டப்பட்டது ெதாடர்பாக விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் மலைப்பகுதி கிராமங்களில் அடுக்குமாடி வீடுகள், வணிக, வர்த்தக கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையக பாதுகாப்பு குழுவினரிடம் (ஹாகா) அனுமதி பெற்று தான் கட்டிடம் கட்டவேண்டும். ஆனால் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடிகள், வணிக கட்டிடங்கள் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நரசீபுரம், வண்டிக்காரனூர், தீனம்பாளையம், செம்மேடு, போளுவாம்பட்டி, இருட்டுப்பள்ளம், தேவராயபுரம், மாதம்பட்டி உட்பட பகுதிகளில் கடந்த 5 ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் 70 சதவீத வீடுகள் ஹாகா கமிட்டி விதிமுறை மீறி கட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அடுக்குமாடிகளுக்கு குளம், குட்டை, நீர் வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சப்ளை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரசீபுரம், வண்டிக்காரனூர் பகுதியில் அடுக்குமாடிகளின் முறைகேடு, குடிநீர் திருட்டு தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாய நிலங்களை ஆளுங்கட்சியினர் அதிக பணம் தருவதாக கூறியும், மிரட்டியும் அபகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக குளம், தடுப்பணை, நொய்யல் ஆறு போன்ற நீர் ஆதாரம் உள்ள இடங்களை அபகரித்துள்ளனர். பட்டாதாரர்களை மிரட்டி நீர் ஆதாரமிக்க நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அடுக்குமாடிகளை கட்டி விற்பனை செய்து விட்டார்கள். பல விவசாய கிராமங்கள், அபார்ட்மென்ட் நிர்வாகங்களின் கட்டுபாட்டிற்குள் ேபாய் விட்டதாக தெரியவந்துள்ளது.
நரசீபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பல கிராமங்கள் ஆளுங்கட்சியினர் அதிகார பிடியில் இருக்கிறது. அதிக ஏக்கர் நிலங்களை குறிப்பிட்ட சிலர் வாங்கி விட்டார்கள். புதிய அடுக்குமாடிகள் கட்டி, அந்த பகுதிக்கு ரோடு, பாலம், குடிநீர் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். இந்த அடுக்குமாடிகளை வெளியூர்வாசிகள் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ஆக பயன்படுத்தி வருகிறார்கள். சில அபார்ட்மென்ட்டுகளை ரகசிய ெசயல்பாடுகளுக்கான தங்கும் விடுதியாக மாற்றிவிட்டார்கள். கோவைப்புதூர், கரடிமடையில் ஏராளமான நீர் பிடிப்பு பகுதிகள் அபகரிக்கப்பட்டு அடுக்குமாடிகள் கட்டப்பட்டது. தற்போது மேலும் பல கிராமங்களில் அடுக்குமாடிகள் கட்டப்பட்டு வருகிறது. விதிமுறை மீறி கட்டிய அடுக்குமாடிகளை சீல் வைக்க, இடிக்க உள்ளூர் திட்ட குழுமத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags : Hoga ,Thondamuthur ,Alandurai ,Narasipuram ,
× RELATED பொள்ளாச்சி தொகுதி பொது மக்கள்...