×

முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்கு தேவேந்திரர் எழுச்சி பேரவை ஆதரவு

சாயல்குடி, மார்ச் 30: முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்கு தேவேந்திரர் எழுச்சி பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் தேசம் கட்சி வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி ஆகிய ஒன்றியங்களில் பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் காமராஜபுரம், கோலைபுரம், சமத்துவபுரம், கதையக், காக்கூர் வடக்கு மற்றும் தெற்கு, ஆண்டிச்சியேந்தல், ஆதனக்குறிச்சி, தேவேந்திரர் குடியிருப்பு, தஞ்சாக்கூர், அலங்கானூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேரித்தார்.

அப்போது, திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை தேவேந்திரர் எழுச்சி பேரவை தலைவர் ராஜ்குமார் நேரில் சந்தித்து தனது ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதனைத்தொடர்ந்து ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேவேந்திரர்குல வேளாளர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு ஒன்றாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதேபோன்று, மக்கள் தேசம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வேதமணி தலைமையில், முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் இந்த கட்சியின் வேட்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கனோர் ராஜகண்ணப்பனை நேரில், இந்த தேர்தலில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு வேட்பாளர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும் கடலாடி தாலுகா சாலை கிராமத்தை சேர்ந்த அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன், முதுகுளத்தூர் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ முருகவேல், கமுதி ஒன்றிய செயலாளர் வாசுதேவன், கடலாடி ஒன்றிய பொறுப்பாளர் ஆறுமுகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Devendra Ezhuchi Peravai ,DMK ,Rajakannapan ,Mudukulathur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி