×

நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளர் ஜோதிராமனை ஆதரித்து பூண்டி கலைவாணன் தீவிர பிரசாரம்

திருவாரூர், மார்ச் 30: நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோதிராமன் தொகுதி முழுவதும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஜோதிராமனுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் நேற்று வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்படி கீழவிடையல், மேலவிடையல், சித்தன்வாழுர், கண்டியூர், மாத்தூர், சாரநத்தம், மாணிக்கமங்கலம், அரவூர், கொட்டையூர், நார்த்தங்குடி, பாப்பாகுடி, பூந்தோட்டம்சாத்தனூர், தென்குவளவேலி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் நன்னிலம் தொகுதியின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும்.

மேலும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளவாறு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும். பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும். பால் விலை குறைக்கப்படும். சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். மாணவர்களின் கல்வி கடன், மகளிர் சுய உதவி கடன் போன்றவை தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் எல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளதால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஜோதிராமனை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

பிரசாரத்தின்போது திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ராதா, இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி, விசி ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Boondi Kalaivanan ,Nannilam ,DMK ,Jyothiraman ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு