×

தெருவிளக்குகள் இல்லை: வீடுகளில் தொடர் திருட்டு அச்சத்தில் வாழும் அறந்தாங்கி நவரத்தினா நகர் மக்கள்

அறந்தாங்கி, மார்ச்30: அறந்தாங்கி எல்.என்.புரம் நவரத்தினா நகரில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகரின் தென்கிழக்கு எல்லையில் அறந்தாங்கி நகருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் நவரத்தினா நகர் உள்ளது. அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள இந்த பகுதியில் பல ஏக்கர் காலிமனைகள் உள்ளன.

இந்த பகுதியில் அறந்தாங்கி நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்படாததாலும், நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதாலும், ஏராளமான காலிமனைகள் உள்ளதாலும் இரவு நேரங்களில் இப்பகுதியில் பலர் அமர்ந்து மதுபானம் அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் போன்றவற்றையும் திருடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நவரத்தினா நகரை சேர்ந்த ஒரு வீட்டில் சுமார் 16 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுபோல இப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அப்பகுதி பெண்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில்,அறந்தாங்கி எல்.என்.புரம் நவரத்தினா நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் காலிமனைகள் அதிகம் உள்ளதால், அந்த மனைகளில் சிலர் இரவு நேரங்களில் விடிய விடிய மது அருந்துகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அறந்தாங்கி எல்..என்.புரம் நவரத்தினா நகர் பகுதி மக்களின் நலன் கருதி அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aranthangi Navaratna Nagar ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...