மதுரை, மார்ச் 30: கரூர் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தடை கோரிய வழக்கில், மாவட்ட கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர், அரவக்குறிச்சியைச் சேர்ந்த மனோகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள வெஞ்சமாங்கூடலூர், படத்தநாயக்கன்பட்டி, சின்னவேடம்பட்டி, நாகம்பள்ளி கிராமத்தில் குடகனாறு தொடங்கும் இடத்தில் அணை கட்ட முயற்சி நடந்து வருகிறது. அவ்வாறு கட்டினால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, கரூர் குடகனாற்றின் குறுக்கே, படத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் தடுப்பணை கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர், இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.