×

செய்யாறு அருகே விபத்து: காதணி விழாவுக்கு சென்று திரும்பியபோது லோடு ஆட்டோ கவிழ்ந்து 23 பேர் படுகாயம்

செய்யாறு, மார்ச் 29: செய்யாறு அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், செய்யாறு நகரில் நேற்று நடந்த உறவினர் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்ள லோடு ஆட்டோவில் சென்றனர். பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் ஆட்டோவில் அனைவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். செய்யாறு அருகே புளியரம்பாக்கம் கிராமம் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் வந்தவர்கள் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, விபத்தில் படுகாயம் அடைந்த 23 பேரை மீட்டு, அவ்வழியாக சென்ற கார்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம், செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தீபக், முனுசாமி, கன்னியம்மாள், கண்மணிபாப்பா, ஜெய உள்ளிட்ட 7 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Seiyaru ,
× RELATED செய்யாறு அருகே அரசு...