×

வாக்காளர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து திமுக வேட்பாளர் பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர்,மார்ச் 29: உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வாருங்கள் என்று தமிழரின் பாரம்பரிய வழக்கப்படி தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களுக்கு கொடுத்து பெரம்பலூர் திமுக வேட்பாளர் பிரபாகரன் வாக்கு சேகரித்தார்.
பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக பிரபாகரன் போட்டிருக்கிறார். இதனையொட்டி திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தொடர்ந்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக நேற்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்குமாதவி சாலையில் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்தப் பகுதியில் வீடுவீடாக வாக்காளர்களிடம் சென்று ஏப்ரல் 6ம்தேதி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வாருங்கள் என தமிழரின் பாரம்பரிய வழக்கப்படி தட்டில் வெற்றிலை பாக்குவைத்து வாக்குகளை சேகரித்தார். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியதாவது :

கடந்த திமுக ஆட்சியில் உழ வர்கள் தாங்கள் உற்பத்தி செய்தக் காய்கறிகளை சந் தைப்படுத்தக் கொண்டுவர ப்பட்ட உன்னதமான திட்டம் தான் உழவர்சந்தை திட்டம். நகரில் சிதறிக்கிடந்த நீதிமன்றங்களை ஒன்றிணைக்க ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்துத் தந்தது திமுக ஆட்சிதான். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் கொண்டுவந்து நகரின் குடிநீர்தேவையை பெருமளவு தீர்த்து வைத்தது திமுக ஆட்சிதான். நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது திமுக ஆட்சிதான். நாரணமங்கலத்தில் டயர் தொழிற்சாலை கொண்டு வந்தது திமுக ஆட்சிதான்.

நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக ஆட்சிதான். பெரம்பலூர் நகரம் பெரு நகர அந்தஸ்து பெற திமுக ஆட்சியமைத்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். பிரசாரத்தின் போது, முன்னாள் எம்எல்ஏக்கள் துரைசாமி, ராஜ்குமார் ,தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : DMK ,Prabhakaran ,
× RELATED விஜயபிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பிரசாரம்