×

பாளை ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் நாங்குநேரி தொகுதி மக்களுக்காக என் கடைசி மூச்சு வரைஉழைப்பேன்

நெல்லை, மார்ச் 29: என் கடைசி மூச்சு வரை நாங்குநேரி தொகுதி மக்களுக்காக உழைப்பேன் என பாளை ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உறுதியளித்தார்.  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான மாநில பொருளாளர் ரூபி மனோகரன், தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டுவந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாளை ஒன்றியம் கிருஷ்ணாபுரம், சிவந்திப்பட்டி, பொன்னாக்குடி, செங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில் ‘‘இதற்கு முன்னர் ரூபி மனோகரனாக உங்களை பலமுறை சந்திக்க வந்து இருக்கிறேன். உங்கள் குறைகளை காதுகொடுத்து கேட்டு, என்னால் முடிந்தவரையில் நிறைவேற்றிக்கொடுத்து இருக்கிறேன். இப்போது, காங்கிரஸ் வேட்பாளராக உங்கள் ஆதரவு தேடி வந்து நிற்கிறேன். இந்த நாங்குநேரி மக்களுடன்தான் இனி நான் வாழ்வேன். என் கடைசி மூச்சு வரை நாங்குநேரி தொகுதி மக்களுக்காகத்தான் உழைப்பேன். நான் இதே தொகுதியில், உங்களோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது, உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். தினமும் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் வந்து, உங்கள் பிரச்னைகளை எல்லாம் கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்துள்ளேன்.

 உங்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பை, அந்தக் கடவுள் எனக்குக் கொடுத்து இருக்கிறார். என்னுடைய இனிவரும் காலம் முழுவதும் உங்களுக்கு சேவைகள்  செய்வேன். நம் நாங்குநேரி தொகுதி வறட்சி நிறைந்த, பின்தங்கிய பகுதியாக உள்ளது, இடைத்தேர்தலின் போது உங்களைத் தேடி வந்தவர்கள் யாராவது அதன் பின்னர் வந்தார்களா? உங்களது குறைகளை காது கொடுத்து கேட்டார்களா? இத்தொகுதியில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்குவதற்காக கொண்டுவரப்பட்ட நாங்குநேரி உயர் தொழில்நுட்ப பூங்கா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதி வளம் பெற கை சின்னத்தில் வாக்களியுங்கள். உங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். உங்கள் தேவைகளை உடனுக்குடன் அறிந்து நிறைவேற்றித் தருவேன். எனவே, காங்கிரஸின் கரத்தை வலிமைப்படுத்துங்கள். கை சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார்.  நேற்று கோயில்கள், ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்திய ரூபி மனோகரன், பின்னர் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சபையின் தலைமை போதகர் மோகன் சி லாசரஸை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது நடிகர் இமான், வக்கீல் காமராஜ், பாளை வடக்கு  வட்டார காங்கிரஸ்  தலைவர் டியூக் துரைராஜ், முரளிதரன், உன்னங்குளம் சுப்பிரமணியன், கிறிஸ்டியான், மார்த்தாண்டம் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : Pali Union ,Nanguneri block ,
× RELATED நெல்லை நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 20...