×

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு பொதுவிடுமுறை வழங்கப்படும்

தென்தாமரைகுளம், மார்ச் 28:தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் தெரிவித்தார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் எம்எல்ஏ நேற்று காலை தென்தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு திறந்த ஜீப்பில் நின்று கொண்டு தனக்கு உதயசூரியன் சின்னத்திலும், திமுக கூட்டணி பாராளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் விஜயகுமார் என்ற விஜய்வசந்துக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க கேட்டு பிரசாரம் துவங்கினார்.

திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, பேராசிரியர் மகேஷ், தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், திமுக பேரூர் செயலாளர்கள் பூவியூர் காமராஜ், பாபு, வைகுண்டபெருமாள், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் எட்வின்ராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி பிரேம்ஆனந்த், ஒன்றிய பிரதிநிதி ஜாண் கிறிஸ்டோபர், திமுக ஒன்றிய மாணவரணி துணைஅமைப்பாளர் நாஞ்சில் ஜோனிமோசஸ்,  உட்பட திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

 தென்தாமரைகுளம், குமாரபெருமாள்விளை, விஜயநகரி, மேலச்சந்தையடி, காட்டுவிளை, பூவியூர், புன்னையடி, முகிலன்குடியிருப்பு, இலந்தையடிவிளை, கோவளம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். அப்போது ஆஸ்டின் பேசியதாவது: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாமித்தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தலைமைபதியில் வருடம்தோறும் அவதார தினமான மாசி 20 அன்று நடைபெறும் விழாவில் குமரி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் பங்கேற்பார்கள். அவருடைய அவதார தின விழாவை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் குமரி மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் பெயரில் ஆராய்ச்சி மையம் தொடங்கவேண்டும் என்றும், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் விசாக திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்றும் பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். நான் உங்கள் கோரிக்கைளை உடனடியாக நிறைவேற்றுவேன். ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் வேலை நாட்களை 100 நாளில் இருந்து 150 நாட்களாக உயர்த்துவதுடன் அவர்களின் ஊதியம் உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,Tamil Nadu ,Ayya Vaikundar Incarnation Day ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம்...