×

திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவோம் தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி உறுதி

தொண்டாமுத்தூர், மார்ச் 29: தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி நேற்று சுகுனாபுரம் பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணா கல்லூரி, சுகுணாபுரம் கிழக்கு மலைப்பகுதி,செந்தமிழ்நகர்,சுகுணாபுரம் கிழக்கு போஸ்ட் ஆபிஸ், பி.கே.புதூர், மாரியம்மன் கோயில், இந்திராநகர்,சாரதாநகர், அசோக்குமார் நகர், முத்துசாமி சேர்வை வீதி, பழனியப்பா கோனார் வீதி, மதுரை வீரன் கோவில் வீதி, பெருமாள் சாமி கோவில் வீதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பிரசாரத்தின் போது பேசியதாவது: சிறுபான்மையின மக்களை காக்கும் அரணாக திமுக திகழும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியை நிறைவேற்றுவோம். ஏழைகளுக்கு இலவச பட்டா வழங்கப்படும்.

குடும்பத்தலைவிகள் நகர பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கடன் தள்ளுபடி செய்யப்படும். 5 பவுன் வரை கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். இன்னும் எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிச்சயம் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார். திமுக கூட்டணி வெற்றி பெற உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் குனியமுத்தூர் பகுதி கழகத்திற்குட்பட்ட அம்மன் காலனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வீதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். முன்னதாக கரூர் எம்.பி. ஜோதிமணி வேட்பாளர் கார்த்திகேய சிவ சேனாபதியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Tags : Thondamuthur ,Karthikeya Sivasenapathy ,DMK ,
× RELATED தொண்டாமுத்தூர் பேரூராட்சி திமுக...