×

கொரோனா தொற்று அதிகரிப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

மன்னார்குடி, மார்ச். 26: கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு அளித்து ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடை பயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்களின் நலன்கருதி தமிழக அரசு 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சியளித்து பிறகு மறு உத்தரவு வரும் வரை விடுமுறையளிக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் விடுமுறையளிக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று நாளுக்குநாள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருவது வேதனையளிக்கிறது. தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் 40 ஆயிரத்தையும் தாண்டி குறிப்பாக தமிழகத்தில் ஒரே நாளில் 1,385 பேர் கொரோனா பாதித்து 10 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கின்றது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் தமிழத்தில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதனால் பொதுத் தேர்வென்பதால் 12ம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளை தினந்தோறும் அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றோம் என பெற்றோர்கள் கவலையோடு தெரிவிக்கிறார்கள். எனவே, பெற்றோர்களின் அச்சத் தைப் போக்கவும் மாணவர்களின் நலன்கருதி கல்லூரியைத் தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும். இந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வினை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியரை சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu Teachers' Union ,
× RELATED திருப்புதல் தேர்வு வினாத்தாள்...