×

புதுக்கோட்டையில் தண்ணீர் சிக்கனம், மரம் வளர்த்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, மார்ச் 26: தண்ணீர் சிக்கனம் மற்றும் மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மேலப்பட்டி கிராம அறிவு மையம் இணைந்து ஏற்பாடு செய்த தண்ணீர் சிக்கனம் மற்றும் மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இலுப்பூர் அருகே மேலப்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
தண்ணீர் மற்றும் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. தண்ணீரும் மனித குலத்தின் வாழ்வும் பின்னிப் பிணைந்திருப்பதால் நீருக்கு கொடுக்கப்படும் விலையைவிட அதன் மதிப்பு மிகவும் உயர்வானது. இதனை மறந்தால் நாம் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்த ஆண்டு உலக தண்ணீர்தின செய்தியில் ஐ நா எச்சரித்துள்ளது. நிலத்தடி நீர் தான் நீரின் மிகமுக்கிய ஆதாரமாக உள்ளது.
ஆனால் நிலத்தடி நீரை ஆழ்குழாய் கிணறுகள் மூலம் அதிக அளவில் உறிஞ்சி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கிறது. எனவே மழை நீரை முறையாக மற்றும் அக்கறையாக சேகரிப்பது மட்டுமே நிலத்தடி நீரின் அளவை உயர்த்தும் முயற்சியாக அமையும். எனவே அனைவரும் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை சேமிப்பது சிக்கனமாக பயன்படுத்துவதை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். மேலும் மரக்கன்றுகளை ஆங்காங்கே நட்டு முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எண்ணை பஞ்சாயத்து தலைவர் நாகராஜன், கிராம அறிவு மைய மேலண்மைக்குழு தலைவர் சிவசுப்பிரமணியன், கிராம அறிவு மைய பணியாளர் லெட்சுமி ஆகியோர் நீரின் அவசியம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சமூக பணியியல்துறை மாணவி வின்சென்டிய வரவேற்றார்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...