×

காரைக்கால் அரசு மருத்துவமனையில் பூட்டி கிடக்கும் கண் சிகிச்சை பிரிவு திறக்கப்படுமா?

காரைக்கால்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களாக பூட்டிக்கிடக்கும் கண் சிகிச்சை பிரிவு மையத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக தனிப்பிரிவு இயங்கி வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த பிரிவு கொரோனா சிகிச்சைக்காக மாற்றப்பட்டது. தற்பொழுது அந்த வார்டில் சிகிச்சை ஏதும் நடைபெறாமல் கடந்த 8 மாத காலமாக பூட்டியே கிடக்கிறது. கண் சிகிச்சையும் நடைபெறவில்லை. கண் நோய் சிகிச்சைக்காக வந்தால் திருநள்ளாறு மற்றும் நெடுங்காட்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள் நலம் மற்றும் பாதுகாப்பு சங்கம் உடனே கண் மருத்துவ சிகிச்சை பிரிவினை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் தலைவர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை, கடந்த எட்டு மாத காலமாக கண் சிகிச்சை பிரிவு மூடியிருப்பதால் கண்நோய் உள்ளவர்கள் சிகிச்சை பெற முடியவில்லை. கண்ணுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்தால் திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு கண் நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கு எந்தவித வசதியும் இல்லை. தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு ஐம்பதாயிரம் முதல் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டி உள்ளது.
கண் நோயால் அவதிப்படுவோர் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறினாலும், அதனையும் செய்யாமல் காலம் தாழ்த்தி இழுத்தடிப்பு செய்கின்றனர். ஒரு நபருக்காக புதுச்சேரிக்கு செல்ல முடியாது. நிறைய பேர் சேர்ந்தால் மட்டுமே புதுச்சேரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல முடியும். அரசு மருத்துவமனை நிர்வாகம் மக்களை அலைக்கழிக்கிறது. நிறையபேர் வரும் வரையில் கண்நோய் உள்ளவர்கள் வலியோடு காத்திருக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் எடுத்துக் கூறினாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்மூடி இருப்பதாகவும், கண் நோய் உள்ளவர்களை குணப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் கண் திறக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை , எளிய மக்கள் தங்கள் மருத்துவ தேவைக்காக அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருப்பதால் அங்கு வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஏக்கம்.

Tags : Karaikal Government Hospital ,
× RELATED காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை...