பள்ளிகொண்டா, மார்ச் 26: விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் திருத்தேர் உற்சவம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.வேலூர் மாவட்டம் செதுவாலை அடுத்து உள்ளது விரிஞ்சிபுரம். இங்கு சுமார் 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற மரகாதம்பிகை உடனுறை மார்கபந்தீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த வாரம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது.
பிரமோற்சவம் தொடங்கிய நாள் முதல் தினமும் காலையும் மாலையும் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று முன்தினம் முக்கிய நிகழ்ச்சியான யானை வாகன சுவாமிகள் வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொடரந்து ஏழாம் நாளான நேற்று காலை உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணியளவில் திருத்தேர் உற்சவம் தொடங்கியது. ஆயிரகணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பாதுகாப்புக்காக தீயணைப்பு துறை மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சசிக்குமார், எழுத்தர் ஆனந்தன் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.