×

திருவள்ளூர் அருகே தலக்காஞ்சேரி ஏரியில் விதிமீறி மண் எடுப்பு: தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

திருவள்ளூர், மார்ச் 26: சட்டமன்ற தேர்தல் அறிவித்து தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, எந்தவித டெண்டரும் விடக்கூடாது  என விதிமுறை இருந்தும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் தலக்காஞ்சேரி அருகே உள்ள புல்லரம்பாக்கம் ஏரியில் சவுடு மண் எடுப்பதற்கு டெண்டர் விடப்பட்டு, தற்போது 20 அடிக்கு மேலாக மண்ணெடுத்து உள்ளனர். தேர்தல் ஆணைத்திற்கு கட்டுப்படாத திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி ஏரியில் இயங்கும் அரசு மண் குவாரியில், விதிமுறையை மீறி அளவுக்கதிகமாக மண் எடுத்து வருகின்றனர். 3 அடிக்கு மேல் தோண்டக்கூடாது என்ற விதிமுறையை மதிக்காமல், 20 அடி ஆழம் வரை மண் எடுப்பதால், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தலை புறக்கணிக்க அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின்கீழ், 1,945 ஏரிகள் உள்ளன. 1,895 குளங்களும் உள்ளன. பொதுப்பணித்துறை ஏரி நீர்ப்பாசனத்தை நம்பி 8,455 ஹெக்டேர் நிலங்களும், ஒன்றிய ஏரி நீர்ப்பாசனத்தை நம்பி 4,676 ஹெக்டேர் நிலங்களும் உள்ளன.

பருவ மழை தொடங்கினால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கிவிடும். ஆனால், ஏரிக்கு நீர் வரும் வரத்து கால்வாய், ஏரி மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில்லை.
ஏரி, குளங்களை நம்பி பாசன வசதி பெறும் விளை நிலங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தூர்ந்து போன ஏரிகளை ஆழப்படுத்துவதாக கூறி, தனியார்கள் ஏரியில் மண் எடுத்துக் கொள்ள அரசு அனுமதிக்கிறது. இந்த மண், சாலை அமைத்தல், செங்கல் சூளைகளுக்கும் பயன்படுகிறது.ஏரிகளில் மண் எடுப்பவர்கள், பகல் நேரத்தில் மட்டுமே மண் எடுக்க வேண்டும். அனுமதி பெற்ற லோடு மண் மட்டுமே எடுக்க வேண்டும்.அதுவும், 3 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுக்கக் கூடாது என்று அரசு விதிமுறை வகுத்துள்ளது. ஆனால், இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கவிட்டு, தங்கள் இஷ்டத்திற்கு 20 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுக்கின்றனர்.

 இந்நிலையில் அளவுக்கதிகமாக ஏரிகளில் மண் எடுப்பதால், மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீர் வந்தாலும் அதனை ஈர்த்துக் கொள்ள இயலாது. இதன் காரணமாக, மேலும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஏரியை நம்பியுள்ள கிராமங்கள், விவசாய கிணறுகளுக்கு தண்ணீர் ஊற்று கிடைப்பது முற்றிலும் தடைபடும். குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு, கோடைக் காலத்தில் வறட்சியை சந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர் ஒன்றியம் சிட்ரத்தூர் ஏரி, கடம்பத்தூர் ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில் உள்ள வெங்கட ஏரி, வெண்மனம்புதூர் ஏரி, ஏகாட்டூர் ஏரி, கண்ணூர் ஏரி, கூவம் ஏரி, கனகவல்லிபுரம் ஏரி, திருப்பாச்சூர் இஷா ஏரி உட்பட பல்வேறு ஏரிகளில் மூன்றடிக்கு மேல் மண் எடுக்கக்கூடாது என விதி இருந்தும், ஒப்பந்ததாரர், 20 அடிக்கு மேல் மண் எடுத்துள்ளதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே, தலக்காஞ்சேரி ஏரியில் இயங்கும் அரசு மண் குவாரியை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து, விதியை மீறிய ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

நூதன முறையில் மணல் கடத்தல்
திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரி இல்லாததால் வீடு கட்ட முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தலக்காஞ்சேரி ஏரியில் 3 அடிக்கு கீழே மணல் உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, 4 யூனிட் கொண்ட லாரிகளில், 3 யூனிட் மணல் ஏற்றுகின்றனர். அதன் மீது தார்ப்பாய் போட்டு, ஒரு யூனிட் சவுடு மண் ஏற்றுகின்றனர். இதன்மூலம், மணலுக்கு கூடுதல் தொகையாக பல ஆயிரம் ரூபாயை ஒப்பந்ததாரர்கள் வசூலிக்கின்றனர். இவ்வாறு நூதன முறையில் மணல் கடத்தலும் நடந்துவருகிறது.

Tags : Talakkancherry Lake ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...