×

உசிலம்பட்டி அருகே விபத்து வழக்கில் நடவடிக்கை இல்லை ஆம்புலன்சை மறித்து உறவினர்கள் மறியல்

உசிலம்பட்டி, மார்ச் 26: உசிலம்பட்டி அருகேயுள்ள போலியம்பட்டி கிராமத்தை சேர்ந்த நரையாண்டி மகன் சதீஷ்குமார் (27) இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டூவீலரில் தி.விலக்கருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் இறந்து போனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், உள்ளது. நேற்று சதீஷ்குமார் உடல் மதுரையிலிருந்து ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது.

அப்போது மதுரை- உசிலம்பட்டி சாலை பொட்டுலுப்பட்டி விலக்கு பஸ்நிறுத்தம் அருகே வந்த போது திடீரென சதீஷ்குமாரின் உறவினர்கள், கிராமமக்கள் விபத்து வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆம்புலன்சை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அருகிலுள்ளவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யுங்கள் எனக்கூறி சாலை மறியலை கைவிட செய்தனர்.

Tags : Usilampatti ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...