×

அமைச்சருக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு திருமங்கலம் அமமுக வேட்பாளருக்கு முன்ஜாமீன்

மதுரை, மார்ச் 26: அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் திருமங்கலம் அமமுக வேட்பாளருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் மையிட்டான்பட்டியைச் சேர்ந்த ஆதிநாராயணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மருதுசேனை சங்கத்தின் தலைவராக உள்ளேன். அமைச்சர் உதயகுமாரை எதிர்த்து அமமுக சார்பில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறேன். மார்ச் 14ம் தேதி திருமங்கலம் ஜெயலலிதா கோயில் அருகே நான் நின்று கொண்டு, அமைச்சர் உதயகுமார் குறித்து தவறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறி டி.கல்லுப்பட்டி போலீசார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசியல் காரணங்களுக்காக, அமைச்சரின் தூண்டுதலின்பேரில் வேண்டுமென்றே, சம்பவம் குறித்து முறையாக விசாரிக்காமல் போலீசார் பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனது தேர்தல் பணிகளை தடுத்திடும் வகையில் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே, நான் கைது செய்யப்படுவதை தவிர்க்க எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி எம்.நிர்மல்குமார் நேற்று விசாரித்தார். அரசுத்தரப்பில், ‘‘மனுதாரர் மீது ஏற்கனவே 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் பணியை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. இனிமேல் தனிநபரை தாக்கி பேசமாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இதை மீறினால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Tags : Thirumangalam Aam Aadmi Party ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ