மதுரை, மார்ச் 26: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் இப்பகுதியிலுள்ள பூ விவசாயிகள், காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி, ஜோசப்நகர், திருநகர், மகாலட்சுமி காலனி பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர்
பேசுகையில், ‘திருநகரில் ஹாக்கி செயற்கை இழை மைதானம் அமைப்பேன். கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு தறிக்கூடம் அமைக்கப்படும். குளிர்வசதி செய்யப்பட்ட பயணிகள் நிழற்குடைகள் அமைப்பேன்’ என்றார்.
தொடர்ந்து மாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது முதல்வர், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகட்டி தரப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்’ என்றார். பிரசாரத்தின்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் இருந்தனர்.