புதுச்சேரி, மார்ச் 26: புதுச்சேரியில் 15 சட்டசபைக்கான பொதுத்தேர்தலில் 116 சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். இதுதவிர 35 பெண்கள் களத்தில் உள்ளனர்.புதுச்சேரியில் 15வது சட்டசபைக்கான பொதுத்தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 6ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் மாநில தேர்தல் துறையால் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி அதிகமாக 16 வேட்பாளர்கள் கொண்ட தொகுதியாக உழவர்கரை, நெல்லித்தோப்பு ஆகியவை உள்ளன. குறைவாக கதிர்காமம், மாகேயில் தலா 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இத்தேர்தலில் ஆண் வேட்பாளர்கள் 289 பேரும், பெண் வேட்பாளர்கள் 35 பேர் என மொத்தம் 324 பேர் போட்டியிடுகின்றனர்.
மேலும் சுயேட்சைகளாக 116 பேர் களமிறங்கி உள்ளனர். தேசிய கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியில் 11 பேர், பாஜகவில் 9 பேர், இந்திய கம்யூனிஸ்ட் 1, மார்க்சிஸ்ட் 1, காங்கிரஸ் 14 ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாநில கட்சிகளான அதிமுக 5, என்ஆர் காங்கிரஸ் 16, திமுக 13, அமமுக 25, சிபிஐ எம்எல் 1, தேமுதிக 26, நாம் தமிழர் கட்சி 28, மநீம 22, ஐஜேகே 20, ஜனதா தளம் (யு) 4, இந்தியன் டெமோகிரடிக் பார்ட்டி 1, மை இந்தியா பார்ட்டி 1, பிடிபி 4, புரட்சி பாரதம் 1, எஸ்டிபிஐ 4, விடுதலை சிறுத்தை 1 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.