ராஜபாளையம், மார்ச் 25: ராஜபாளையம் நகர் பகுதியில் கடந்த சில வருடங்களாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச்சாக்கடை மற்றும் ரயில்வே மேம்பாலம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற் வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் திட்டப்பணிகளால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.
ராஜபாளையம் நகர் பகுதியில் போதிய இணைப்புச் சாலைகள், புறவழிச் சாலைகள் இல்லாத காரணத்தினால் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரதான சாலைகளில் கனரக வாகனங்களை கொண்டு பணிகளைச் செய்துவிட்டு ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.