கருங்கல், மார்ச் 25: மக்களின் கணிப்பு தேர்தல் அன்று வெளிப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜூட் தேவ் ஆகியோரை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கருங்கல் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். குறும்பனை, ஆலஞ்சி, மிடாலம், மேல் மிடாலம், ஹெலன் நகர், இனயம், புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை, தேங்காப்பட்டணம், கூட்டாலுமூடு, புதுக்கடை, காஞ்சாம்புறம், நித்திரவிளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
திறந்த ஜீப்பில் கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் ஜூட் தேவை ஆதரித்து ஜி.கே.வாசன் பேசியதாவது: கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனும், கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் ஜூட் தேவ் ஆகிய இரு வேட்பாளர்களும் மக்களோடு மக்களாக மக்கள் பணியையும், இயக்க பணிகளையும் இரு கண்களாக நினைத்து செயல்படுவார்கள். மண்ணின் மைந்தர்களாக உள்ளார்கள். ஒத்த கருத்துடைய வேட்பாளர்களையும், ஒத்த கருத்துடைய ஆட்சியும் ஒரே தலைமையின் கீழ் வரும்போது 100 சதவீதம் மக்கள் நல திட்டங்களை கொண்டுவர முடியும். அந்த வகையில் இரு உறுப்பினர்களும் செயல்படுவார்கள். இந்த தொகுதிக்கு ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குமாரதாஸ், ஜாண் ஜேக்கப் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அந்த திட்டங்கள் தொடர வேண்டும்.
பொன்.ராதாகிருஷ்ணன் பல ஆயிரம் கோடி செலவில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவரின் வளர்ச்சி பணிகளும் தொடர வேண்டும். எனவே மக்கள் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனையும், கிள்ளியூர் தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிடுகின்ற ஜூட் தேவையும் ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமாகா கிழக்கு மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம், மேலிட பார்வையாளர் ராஜமகாலிங்கம் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக கருங்கல் வந்த ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: நீண்ட இடைவேளைக்கு பிறகு போக்குவரத்து நெரிசல் பாதியாக குறைந்து மிக பிரமாண்டமான பாலங்கள் அமைத்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்த பெருமை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. தமாகாவில் ஜீட் தேவ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பார் என்று மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. வாக்குகளை அதிகம் பெற்று வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். கருத்து கணிப்பு மக்களை ஏமாற்றும் கணிப்பு, மக்கள் கணிப்பு மக்கள் மனதில் இருந்து வெளி வரக்கூடிய உண்மையான கணிப்பு, மக்களின் கணிப்பு தேர்தல் அன்று வெளிப்படும் ஒன்று. மத்திய மாநில அரசின் திட்டங்கள் தமிழகத்தில் முழுமையாக வந்து சேர்ந்து தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக வரக்கூடிய நல்ல சூழல் உள்ளபோது நிச்சயமாக ஒத்த கருத்துடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.