தக்கலை, மார்ச் 25: பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மனோ தங்கராஜ் நேற்று காலை அழகிய மண்டபம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய-மாநில அரசுகளால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, இளைஞர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து லட்சத்து 76 ஆயிரம் கோடி கடனை தமிழக மக்களின் தலையில் சுமத்தியுள்ளது தான் இந்த ஆட்சியின் சாதனையாக கருதப்படுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள் நலன் பாதுகாக்கப்படும்.
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் நீர்வளத்துறை என தனி அமைச்சகம் அமைக்கப்பட உள்ளது. சானல்கள், குளங்கள் தூர்வாரப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே மக்கள் நலம் பேணும் அரசாக ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் மறைவிற்கு பிறகு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வசந்தகுமார் மகன் விஜய் குமார் என்ற விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் ஆதரவளிக்க வேண்டும் என் அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், திருவிதாங்கோடு பேரூர் பொறுப்பாளர் ஷேக் முஹம்மது, டாக்டர் அலிகான், மண்டல பொறுப்பாளர் நசீர், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜேந்தர் ராஜ், காங்கிரஸ் வட்டார செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட செயலாளர்கள் வின்சென்ட் ராஜா, ராபர்ட், மார்க்சிஸ்ட் வட்டார செயலாளர் ஜாஸ்மின், மாதவன், சைமன் சைலஸ், ராஜன், சந்திரகலா, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் மேசியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.