பேரணாம்பட்டு, மார்ச் 25: பேரணாம்பட்டு அடுத்த பாய்ங்ஷாப் வெங்கட சமுத்திரம் கூட்ரோடு பகுதியில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி செல்வகணேசன் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்ப வந்த வாகனத்தை தடுத்து சோதனையிட்டனர்.
சோதனையில் ரொக்கப்பணம் ₹47 லட்சத்தை தேவலாபுரம் கிராமத்திலுள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்புவதற்காகவும், இதில் ₹42 லட்சத்திற்கு மட்டும் ஆவணம் வைத்திருந்தது தெரிய வந்தது. போதிய ஆவணமின்றி ₹5 லட்சத்தை கொண்டு வந்ததால் அதிகாரிகளின் குழுவினர் ₹5 லட்சத்தை பறிமுதல் செய்து பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும் தாசில்தாருமான கோபியிடம் ஒப்படைத்தனர்.