ஸ்பிக்நகர், மார்ச்24: தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம், காலாங்கரை, கோரம்பள்ளம், வீரநாயக்கந்தட்டு உள்ளிட்ட கோரம்பள்ளம் குளம் பாசன பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, பெரும்பாலான இடங்களிலும் அறுவடை பணிகளும் முடிவடைந்துள்ளன. நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். கலெக்டர் உத்தரவை அடுத்து அத்திமரப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அத்திமரப்பட்டி, முள்ளக்காடு விவசாய சங்கத்தினர் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்களது கோரிக்கையை ஏற்று நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அம்பை 16 ரகம் கிலோவுக்கு பத்தொன்பது ரூபாய் பதினெட்டு பைசாவும், சன்ன ரகம் கிலோ பத்தொன்பது ரூபாய் அறுபத்து எட்டு பைசாவும் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர். திறப்பு விழாவில் அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம் விவசாய சங்க தலைவர் அழகுராஜா ஜெபராஜ், செயலாளர் சேகர், நிர்வாகிகள் திருமால், ரகுபதி உள்ளட்டோர் கலந்துகொண்டனர்.