×

தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

தூத்துக்குடி,மார்ச் 24: தூத்துக்குடியில் தொடர்கொள்ளையில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6.50 லட்சம் மதிப்பிலான நகை, பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது. இதில் சுமார் 20 பவுன் மதிப்பிலான நகைகள், எல்இடி டிவிகள், செல்போன்கள், ஹோம் தியேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கபட்டன. தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து துப்புதுலக்க இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, எஸ்ஐ வேல்ராஜ், ஏட்டுகள் ஆறுமுகம், பென்சிங், செந்தில், முத்துப்பாண்டி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்திவந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் டேவிஸ்புரம் பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டையை சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பன்ராஜா (29) என்பதும், அவர் சென்னையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலைபார்த்ததும் தெரியவந்தது. மேலும் அவர் மீது சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தூத்துக்குடி விவேகானந்தாநகரில் வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
 தூத்துக்குடியில் தங்கியிருந்த நிலையில் 7 வீடுகளில் கொள்ளையடித்துள்ளார். அவரிடம் இருந்து சுமார் 16 பவுன் தங்கநகைகள், 3 எல்இடி டிவிகள், 4 செல்போன்கள், 2 ஹோம்தியேட்டர்கள், உண்டியல் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.6.50 லட்சம் ஆகும். பிடிபட்ட அப்பன்ராஜிடம் தொடர்ந்து தனிப்படையினர் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!