×

தாராபுரம் தொகுதியில் எனது வெற்றி உறுதி

தாராபுரம், மார்ச் 24: தாராபுரம் தொகுதியில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.   தாராபுரம்(தனி) சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் உப்பாத்து ஆலாம்பாளையம் கிராமத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான எனது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. காரணம் நான் உள்ளூர்வாசி. பொதுமக்கள் தங்கள் பிரச்சனைக்காக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். எனது வீட்டு கதவுகள் திறந்திருக்கும். ஆனால் பாஜ வேட்பாளர் வெளியூரைச் சார்ந்தவர். தாராபுரம் மக்களுக்கு அவர் பயன் படமாட்டார்.மேலும் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பொதுமக்கள் மத்தியிலே நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.  இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்ற வாசகம் பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
 அதிமுகவில் மாதந்தோறும் இலவசமாக உதவித்தொகை வழங்கப்படும் என்கிறார்கள். அது பெண்களின் தன்மானத்துக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தும் ஒரு சொல். அதேநேரத்தில் உதவித்தொகை என்பதை உரிமைத் தொகை என அறிவித்தது பெண்களுக்கும் மனநிறைவைத் தருகிறது . மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கல்விக் கடன் ரத்து, 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் தமிழக இளைஞர் இளம்பெண்களால் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு மக்களிடம் அமோக ஆதரவை பெற்றுள்ளது விவசாயிகளுக்கான குளிர்பதன கிடங்கு, முருங்கைக்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை, குளத்துப்பாளையம் நூற்பாலை மீண்டும் திறப்பது, தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி, மருத்துவ பயிர் கண்வலிக்கிழங்கு ஏற்றுமதி திறனுடன் கூடிய கூடுதல் விலை இவை அனைத்தும் திமுக ஆட்சியில் நிச்சயம் சாத்தியப்படுத்தப்படும்.  எனவே உங்களின் எதிர்காலம் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக ஆக்கித் தர உதயசூரியன் சின்னத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும். பாஜகவிற்கு வாக்களித்து உங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றுவதில் இருந்து விழிப்புணர்வுடன் தற்காத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tarapuram ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது