×

2வது மனைவியுடன் சேர்ந்து மகனை தாக்கிய தந்தை வந்தவாசி அருகே ஆடு மேய்ந்த தகராறில்

வந்தவாசி, மார்ச் 24: வந்தவாசி அருகே ஆடு மேய்ந்த தகராறில் 2வது மனைவியுடன் சேர்ந்து மகனை தாக்கிய தந்தை உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த கொரசளவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(65). இவரது மனைவி சீதா. இவர் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ஏழுமலை 2வதாக சாவித்திரி(49) என்பவரை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்த ராஜாபாபுவிற்கும், தந்தை ஏழுமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி ராஜாபாபுவிற்கு சொந்தமான ஆடுகள் ஏழுமலைக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேய்ந்ததாக தெரிகிறது. இதை ஏழுமலை, ராஜாபாபுவிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த ஏழுமலையின் 2வது மனைவி சாவித்திரி, மகன் சரவணன்(30), உறவினர் பாஸ்கர் ஆகியோர் ராஜாபாபுவை சரமாரி தாக்கினார்களாம். இதில் காயமடைந்த ராஜாபாபு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து ராஜாபாபு வடவணக்கம்படி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஏழுமலை உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறார்.

Tags : Vandavasi ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...