திருமங்கலம், மார்ச் 23: திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் உதயகுமார் நேற்று சோலைப்பட்டி, வி.அம்மாபட்டி, கீழக்காடனேரி, காடனேரி, குமாரபுரம், சொக்கம்பட்டி, சாலிசந்தை, அம்மாபட்டி, பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோ்தல் பிரசாரம் செய்தார். சொக்கம்பட்டி கிராமத்தில் வயலில் நாற்று நட்டு கொண்டிருந்த விவசாயிகளை கண்ட அமைச்சர் உதயகுமார் பிரசார வாகனத்தை விட்டு இறங்கி சென்று வயல்வெளியில் தானும் இறங்கி நாற்றுகளை நட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் திகழ்கின்றனர். விவசாயிகளுக்காக அதிமுக அரசு பல்வேறு சலுகைகளை செய்துள்ளது. முல்லைபெரியாறு, காவேரி உள்ளிட்ட பல்வேறு விவசாய பிரச்னைகளுக்காக அதிமுக அரசு போராடி உரிமைகளை வாங்கி தந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிதான். உங்களது கஷ்ட, நஷ்டங்களை நன்குஅறிந்தவர். அதனால்தான் ரூ.12,110 கோடி விவசாய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகை அடகு வைத்திருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். எனவே வரும் தேர்தலில் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.