மதுரை, மார்ச் 23: மதுரை வடக்கு தொகுதியில் நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று திமுக வேட்பாளர் கோ.தளபதி வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தார். மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கோ.தளபதி போட்டியிடுகிறார். இவர் நேற்று குலமங்கலம் மெயின் ரோட்டு பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘மதுரை வடக்கு தொகுதியில் நிலத்தடி நீரை மேம்படுத்தி நீர்நிலைகளை தூர்வாரி நிரந்தர நீர்த்தேக்கம் ஏற்படுத்துவேன். தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடையை முறைப்படுத்துவேன். அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளாக பல சாலைகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. அவற்றை புதிதாக அமைத்து தருவேன்’ என்றார். தொடர்ந்து அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பொன் சேதுராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன், வட்ட செயலளர் நல்லதம்பி உள்பட பலர் உடன் இருந்தனர்.