×

குஜிலியம்பாறை மாணவி கேரளாவில் மர்மச்சாவு

திருவனந்தபுரம், மார்ச் 23: குஜிலியம்பாறை மாணவி திருவனந்தபுரம் அருகே சுற்றுலா விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கரிக்காலி சேவகவுண்டச்சிபட்டியை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கண்ணன் மகள் தஸ்ரிதா (21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 8 பேர் சுற்றுலாவுக்காக கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலாவுக்கு சென்றனர். இவர்கள் அனைவரும் இங்குள்ள ஒரு சுற்றுலா விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் இவர்களில் ஒருவரது பிறந்தநாள் விழாவை அனைவரும் சேர்ந்து கொண்டாடி உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மாணவி தஸ்ரிதா அவரது அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து வர்க்கலா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருவனந்தபுரம் விரைந்துள்ளனர்.

Tags : Kujiliampara ,Marmachavu ,Kerala ,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...