×

வீரபாண்டி தொகுதியில் நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரி சீரமைக்கப்படும் திமுக வேட்பாளர் டாக்டர் தருண் வாக்குறுதி

சேலம், மார்ச் 23: சேலம் வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் தருண் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த வகையில் இன்று தொகுதிக்கு உட்பட்ட சன்னியாசிகுண்டு, எருமாபாளையம் பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து வேட்பாளர் தருண் கூறுகையில், ‘‘வீரபாண்டி தொகுதி ஒரு வித்தியாசமான தொகுதி. இங்கு விவசாயிகள், நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். மாநகரை ஒட்டியுள்ள சன்னியாசிகுண்டு, எருமாபாளையம்  பகுதியில் குடிநீர் பிரச்சினை, பெரும் பிரச்சினையாக உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வீரபாண்டி தொகுதியில் நீர்நிலைகள் அதிகளவில் உள்ளது. முறையான சீரமைப்பும், பராமரிப்பும் இல்லாமல், இவை அனைத்தும் தற்போது வறண்டு கிடக்கிறது. இதை கருத்தில் கொண்டு  திமுக ஆட்சி அமைந்து, தலைவர் ஸ்டாலின் முதல்வரானவுடன், அனைத்து நீர்நிலைகளையும் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்,’’ என்றார். அப்போது, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி, பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலாசேகர், மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.


Tags : DMK ,Dr. ,Tarun ,Veerapandi ,
× RELATED திமுக வேட்பாளர்களான தயாநிதி மாறன்,...