கோவை, மார்ச் 23: கோவை வடக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் வடவள்ளி வ.ம.சண்முகசுந்தரம் நேற்று கணபதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார்.
அவர் அறிக்கையில கூறியபடி திமுக ஆட்சி அமைந்தவுடன், கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.4,000 வழங்கப்படும். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் குறைக்கப்படும். சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மகளிர் பேறுகால உதவித்தொகையாக ரூ.24,000, பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கப்படும். இன்னும் எண்ணற்ற திட்டங்களை திமுக ஆட்சியில் மக்கள் அனுபவிக்க உதய சூரியன் சின்னத்தை ஆதரியுங்கள் எனக் கூறி பிரசாரம் மேற்கொண்டார். கோவை கணபதி பஸ் நிலையத்தில் இருந்து வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி வ.ம.சண்முகசுந்தரம் நேற்று பிரசாரத்தை துவக்கினார்.பிரசார நிகழ்ச்சியில் பகுதி கழக பொறுப்பாளர்கள் கோவை லோகு, அஞ்சுகம் பழனியப்பன், முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், தேர்தல் பணிக்குழு தலைவர் குப்புசாமி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நந்தக்குமார், சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட செயலாளர் வீரகோபால், மாநில மகளிரணி தொண்டரணி அமைப்பாளர் மீனாலோகு, வட்ட செயலாளர் சாந்தி பன்னீர் செல்வம், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார், ரூபக், ஆரோக்கியசாமி, செல்வராஜ், தாமஸ் வர்க்கீஸ், சேதுபதி, தொகுதி பொறுப்பாளர் கணபதி செல்வராஜ், பகுதி செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.