பொள்ளாச்சி, மார்ச் 23: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று, நகராட்சிக்குட்பட்ட 12 மற்றும் 16, 28, 36வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாச்சலம், நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, சுந்தரம், கேபிள்பாரூக், தமாகாவை சேர்ந்த பிரியங்கா ராமசாமி, பாஜ மணிகண்டன், துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பிரசாரத்தின்போது, அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ‘பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர் மற்றும் கிராமப்புறங்களில், அதிமுக ஆட்சியில்தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில், சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. ஏழை, எளியோர் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, பல வாகனங்கள் மூலம், மதிய உணவு வழங்கப்பட்டது. பொள்ளாச்சி மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியமைந்தவுடன், பொள்ளாச்சி தனி மாவட்டமாக உருவாகும் என்பதில், எந்த சந்தேகமும் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. அதுபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் சிறப்பான ஆட்சியமைக்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுகொள்கிறேன்’ என்றார்.