மாமல்லபுரம், மார்ச் 23: மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களில் ஒன்றான கிருஷ்ணா மண்டபத்தில் சிற்பங்களை தொடாமல் கண்டு ரசிக்கும் வகையில் தொல்லியல் துறை மரத்திலான தடுப்பு வைத்துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன், தபசு, கிருஷ்ணா மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை ஆகிய புராதன சின்னங்கள் பாராம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இவற்றை கண்டு ரசிக்க தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து கண்டு ரசித்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கிருஷ்ணா மண்டபத்திற்குள் சென்று அங்குள்ள சிற்பங்களை தொடுவதும், அதன் மீது ஏறி புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை ஆர்வமாக கொண்டுள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு தொல்லியல் துறை மூலம் 3 அடி தூரத்தில் இருந்து பயணிகள் ரசிக்கும் வகையில் மரத்திலான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மரத்தடுப்புகளை தாண்டி யாராவது சென்று சிற்பத்தை தொட்டு பார்த்தாலோ அல்லது அதன் மீது ஏறி புகைப்படம் எடுத்தாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.