×

கொளத்தூர் தொகுதியில் 2வது நாளாக துர்கா ஸ்டாலின் தீவிர பிரசாரம்

பெரம்பூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து, 2வது நாளாக கொளத்தூர் தொகுதியில் துர்கா ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்தார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால், அவரை ஆதரித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், 2வது நாளாக நேற்று கொளத்தூர் தொகுதிக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். நேற்று மாலை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தீட்டி தோட்டம் பகுதியில் ஆட்டோ தொழிலாளர்களுடன்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஜெய்பீம் நகரில் திருநங்கைகளுடன் கலந்துரையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர், கேசி கார்டன் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து செல்லியம்மன் குடியிருப்பு பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கொளத்தூர் 70 அடி சாலையில் தனியார் மண்டபத்தில் கிறிஸ்தவ  மத போதகர்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார். இதையடுத்து, கொளத்தூர் தேர்தல் பணிமனையை பார்வையிட்டார். நிகழ்ச்சியில், கொளத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நடராஜன், வழக்கறிஞர் கிரிராஜன், பகுதி செயலாளர் ஐசிஎப் முரளிதரன். பன்னீர்செல்வம். சந்துரு, ஊமைதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : Durga Stalin ,Kolathur ,
× RELATED சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி....