×

கோவில்பட்டி தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு மாணிக்கராஜா பேச்சு

கோவில்பட்டி, மார்ச் 23: டிடிவி தினகரன் வெற்றி பெற்றதும் கோவில்பட்டி தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமமுக தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா வாக்கு சேகரிப்பின் போது தெரிவித்தார். கோவில்பட்டி தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தென் மண்டல அமைப்பு செயலாளரும், தேர்தல் பிரிaவு செயலாளருமான மாணிக்கராஜா நேற்று கோவில்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, சத்திரப்பட்டி, இடைசெவல், கோபாலபுரம், நாச்சியாபுரம், நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர், பேசியதாவது: கோவில்பட்டி தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மக்களின் குறைகளை தீர்க்க தனி அலுவலகம் அமைக்கப்படும். தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மழைநீர் தேங்காதவாறு சாலை மற்றும் வாறுகால் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அமமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும். கோவில்பட்டி தொகுதியை பொறுத்தவரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார்.

மக்களின் எழுச்சியை பார்க்கும் போது அவரது வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் சிவபெருமாள், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் கார்த்திக், தேமுதிக மாவட்ட செயலாளர் அழகர்சாமி, வக்கீல்கள் சங்கர்கணேஷ், கார்த்திக் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Manikkaraja ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!