×

திமுக ஆட்சிக்கு வந்ததும் திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்

திருவெறும்பூர், மார்ச் 23: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகிறார். இவர் நேற்று திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகராட்சி 30வது வார்டு பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். சாமிநாதன் தெரு, மிலிட்டரி காலனி, முள்ளிக்குளம், விவேகானந்தர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அப்பகுதியில் உள்ள பெண்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மலர்தூவி வரவேற்றனர். அப்போது உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், திமுக ஆட்சி அமைந்ததும் இந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கப்படும் எனறு வாக்கு சேகரித்தார். முன்னாள் எம்எல்ஏ சேகரன் பகுதி செயலாளர் தர்மராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதைதொடர்ந்து பெல் மெயின் கேட் முன் பெல் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பெல் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும். பெல் நிறுவனத்தை தனியார் மயமாக்க நினைக்கும் மத்திய அரசை விடமாட்டோம். பெல் நிறுவனத்தை தனியார் மயமாக்க நினைக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுகிறது. பெல் நிறுவன வளாகத்திற்குள் ஒன்றே முக்கால் கோடி கொள்ளை போனதில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதுகுறித்து திமுக ஆட்சிக்கு வந்ததும் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தார். பெல் தொமுச தொழிற்சங்க பொது செயலாளர் தீபன் மற்றும் கூட்டணி கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Thiruvampur ,
× RELATED திருச்சி திருவெறும்பூர் அருகே...