×

கொடைக்கானலில் புலி பல், நகம் விற்க முயன்ற இரண்டு பேர் அதிரடி கைது

கொடைக்கானல், மார்ச் 22: கொடைக்கானலில் புலியின் பற்கள் மற்றும் நகங்களை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். கொடைக்கானலில் புலிப்பல் மற்றும் நகங்களை சிலர் விற்க உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் வன சரகர் மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவின் பேரில் ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் அழகுராஜா உள்ளிட்ட வனத்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானல் அண்ணாசாலையில் பூண்டு வியாபாரம் செய்யும் பெரியகுளத்தைச் சேர்ந்த தாமோதரன்(47) மற்றும் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(37) ஆகியோர் புலிப்பல் மற்றும் புலியின் நகங்களை விற்க உள்ளது தெரியவந்தது.

 இருவரையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்ததில் வேறு பகுதியில் இருந்து கொண்டுவந்து கொடைக்கானல் பகுதியில் ரகசியமாக புலி நகங்கள் மற்றும் புலியின் பற்கள் ஆகியவற்றை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை சோதனை செய்ததில் இவர்களிடமிருந்து 4 புலி நகங்கள் மற்றும் புலியின் நான்கு பற்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதுபற்றி கொடைக்கானல் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக புலியின் பற்கள் மற்றும் புலி நகங்களை விற்க முயன்ற இருவரையும் கைது செய்தனர். இந்த சட்டவிரோத விற்பனையில் வேறு யாராவது உடந்தையாக உள்ளனரா? இந்த பற்களையும் நகங்களையும் யாருக்கு இவர்கள் விற்க இருந்தனர், இதற்கு முன்பு இதுபோல் இவர்கள் விற்பனையில் ஈடுபட்டனரா என்பது பற்றி பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்